Panneerselvam :
டெல்லி: துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கை விரைவில் விசாரிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி டி.டி.வி. தினகரன் மற்றும் திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்நேரத்தில், அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
எனவே அந்த உத்தரவை எதிர்த்து திமுக, அமமுக தரப்பினர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி திமுக மற்றும் அமமுக சார்பில் இன்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதாகவும், விரைவில் வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரியும் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்துள்ளார்.
மேலும் வழக்கை விசாரிக்கும் புதிய அமர்வும் உடனடியாக அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஏ.கே.சிக்ரி ஒய்வு பெற்று விட்டதால் புதிய அமர்வு விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விரைவில் வழக்கு விசாரணை நடத்தப்படும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்துள்ளார்.