NGK Thandalkaaran Song : செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும் முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அண்மையில் டீசரை வெளியிட்ட படக்குழு தற்போது இப்படத்தின் முதல் பாடலை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் கபிலன் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடல் அதன் உள்ளடக்கத்திற்காக தற்போது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
”தண்டல்காரன் பாக்குறான், தண்ட சோறு கேட்குறான்” என கந்துவட்டி கொடுமை குறித்து தொடங்கும் பாடல் அதேவேகத்தில்,
”பட்டாம்பூச்சி இங்கே பச்சோந்தியா ஆச்சு.. நாட்டாமையின் கையில் நாடே கெட்டுப் போச்சு” என ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக கை நீட்டுகிறது.
”இந்தியனின் பண்டாட்டை அந்நியனும் வாங்கிட்டானே.. ஆதார் அட்டை இல்லாம ஆட்சி செய்ய வந்துட்டானே” என கபிலனின் வரிகள் வழக்கம் போல எளிமையாகவும் அதேசமயம் உள்ளார்ந்த அரசியலையும் பேசுகிறது.
மேலும் ”காதல் செஞ்சவன வெட்டுறான் சுடுகாட்டில்” போன்ற வரிகள் சமுதாய அவலங்களை அதன் சுடும் உண்மையை உணர்த்தி செல்கிறது.