Neet Exam : சென்னை : காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வெளியிட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நடைமுறையில் ஏழை மாணவர்களுக்கு கடினமான ஒன்று என பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என நேற்று காங்கிரஸ் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது, இந்நிலையில் காங்கிரசின் இந்த அறிவிப்பு அனைவரிடத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: “தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க நீட் தேர்வு மூலம் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்.
நீட் தேர்வு அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான விஷயம், ஏழை மாணவர்களுக்கும் மருத்துவக் கல்வி கிடைக்க நீட் தேர்வு அவசியம்” என்று தெரிவித்தார்.
மேலும் வெற்றி பெறுவதற்கு கடுகளவும் வாய்ப்பில்லை என்ற நிலையில், அள்ளி வீசப்பட்ட வாக்குறுதி தான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து கருத்து கூறினார்.
மேலும் நடைமுறைப்படுத்த முடியாத சில திட்டங்களை காங்கிரஸ் கட்சி வாக்குறுதியாக அறிவித்துள்ளது எனவும் தெரிவித்தார்.