NEET Counselling 2019 :
தேனி: மருத்துவ படிப்பிற்கான தேர்வில் முறைகேடு தொடர்பாக வெளிவந்த தகவலை அடுத்து, மேலும் 5 பேர் சிக்கியுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிரடி தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் உதித்சூர்யா (வயது19). இவர் 2019-2020-ம் ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்று, தேனி அரசு மருத்துவ கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்ந்தார்.
இந்நிலையில், மாணவர் உதித்சூர்யா ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் உதித்சூர்யா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதனிடையே, முன்ஜாமீன் வழங்கக்கோரி உதித்சூர்யா தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அவருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுத்ததுடன், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகளிடம் சரண் அடையுமாறு அவருக்கு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள பஸ் நிலையத்தில் உதித்சூர்யா, அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன், தாயார் கயல்விழி ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
மேலும் அவர்கள் 3 பேரும் சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் உதித்சூர்யா மீது ஆள்மாறாட்டம், கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் கூறியதாவது: “நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் உதித்சூர்யாவிடமும், அவருடைய தந்தை வெங்கடேசனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அளவில் சிறிய மிளகு, புரியும் அற்புத சக்தியை தெரிந்து கொள்ளுங்கள்!..
‘நீட்’ தேர்வு எழுத புரோக்கர் ஒருவரை வெங்கடேசன் சந்தித்து, அந்த புரோக்கர் மூலமாகத்தான் வேறு ஒரு நபரை வைத்து தேர்வு எழுதி உள்ளனர். தேர்வு எழுதியது யார்? என்ற விவரம் தெரியவில்லை என்று உதித்சூர்யாவும், அவருடைய தந்தையும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இந்த வழக்கில் தொடர்புடைய புரோக்கர் பிடிபடும் போதுதான் உதித்சூர்யாவுக்கு பதிலாக தேர்வு எழுதியது யார்? என்பது தெரியவரும்.
இதுவரை நடத்திய விசாரணையில் மேலும், 5 பேர் இதுபோன்று ஆள்மாறாட்டம் செய்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. எனவே மேலும் சிலர் இதில் சிக்க வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.