நாகூர் தர்கா சந்தனக்கூடு கந்தூரி விழாவிற்காக 20 கிலோ சந்தன கட்டைகளை வழங்குவதற்கான அரசாணையை வழங்கியுள்ளார் தமிழக முதல்வர் பழனிசாமி.
Nakur Tharka Function : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள் இன்று (31.7.2020) தலைமைச் செயலகத்தில், நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 20 கிலோ சந்தன கட்டைகளை விலையில்லாமல் வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா நிர்வாக குழு நிர்வாகி திரு.கே. அலாவுதீன், இ.ஆ.ப., (ஓய்வு) அவர்களிடம் வழங்கினார்.
இந்தியாவில் உள்ள புனித தலங்களில் சிறப்பு வாய்ந்ததும், இஸ்லாமிய புனித ஸ்தலங்களில் முக்கியமானதும், சமூக நல்லிணக்கத்திற்கும், சமுதாய ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக திகழும் நாகூர் தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு கந்தூரி (உரூஸ்) திருவிழாவிற்கு விலையில்லாமல் சந்தனக் கட்டைகள் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 25.11.2012 அன்று அறிவித்தார்கள்.
அந்த அறிவிப்பின்படி, 2013-ஆம் ஆண்டு முதல், நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு ஆண்டுதோறும் விலையில்லாமல் சந்தனக் கட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடைபெறவுள்ள நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 20 கிலோ சந்தன கட்டைகளை விலையில்லாமல் வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா நிர்வாக குழுவினரிடம்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று வழங்கினார்கள்.
இந்த நிகழ்வின்போது, மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு. திண்டுக்கல் சி. சீனிவாசன், தலைமைச் செயலாளர் திரு.க. சண்முகம், இ.ஆ.ப., சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) முனைவர் பெ. துரைராசு, இ.வ.ப., நாகூர் தர்கா நிர்வாக குழு நிர்வாகி – ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி திரு.எஸ்.எஃப். அக்பர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்