Ms Dhoni vs Rishabh Pant
Ms Dhoni vs Rishabh Pant

Ms Dhoni vs Rishabh Pant – ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), டெல்லி கேபில்ஸ் அணிகள் மோதுகின்றன.

தோனி தலைமையிலான அனுபவ வீரர்களைக் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியிருந்தது.

அதேவேளையில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி, 3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை அவர்களின் சொந்த மண்ணில் பந்தாடியது.

214 ரன்களை இலக்காக கொடுத்த டெல்லி கேபிடல்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இன்றைய ஆட்ட மானது தோனியின் புத்திசாலித்தனத்துக்கும், டெல்லி கேபிடல்ஸ் அணியின் இளம் அதிரடி வீரரான ரிஷப் பந்த்துக்கும் இடையிலான நேரடி மோதலாக பார்க்கப்படுகிறது.

மும்பை அணிக்கு எதிராக 27 பந்துகளில் 78 ரன்கள் விளாசி மிரளச் செய்த ரிஷப் பந்த் மீண்டும் ஒருமுறை மட்டையை சுழற்ற ஆயத்தமாக உள்ளார்.

அதேவேளையில் ‘அப்பாக்க ளின் ஆர்மி’ என செல்லமாக அழைக்கப்படும் மூத்த வீரர்களைக்கொண்ட சென்னை அணி நெருக்கடியான தருணங்களை தோனியின் புத்திசாலித்தனத்தால் அருமையாக வென்றெடுக்கக் கூடிய திறன்களை கொண்டுள்ளது. இந்த வகையில் டெல்லி கேபிடல்ஸ் அணி சற்று கவனமாக செயல்பட வேண்டி உள்ளது.

சென்னை அணியானது முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்திருந்த சேப்பாக்கம் ஆடுகளத்தில்பெங்களூரு அணியை 70 ரன்களுக்குள் சுருட்டியிருந்தது.

இன்றைய ஆட்டம் நடை பெறும் பெரோஷா கோட்லா ஆடுகளமும், சேப்பாக்கம் ஆடுகளம் போன்று மந்தமாக செயல்படக்கூடியதுதான்.

இதனால் சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான ஹர் பஜன் சிங், இம்ரன் தகிர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டெல்லி அணி பேட்ஸ் மேன்களுக்கு தொல்லைகள் தரக்கூடும்.

இந்த மூவர் கூட்டணி பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கூட்டாக 12 ஓவர்களை வீசி 44 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் 8 விக்கெட்களை வேட்டையாடியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரிஷப் பந்த், மெதுவாக பந்து வீசும் வீரர்களுக்கு எதிராக ரன்கள் சேர்ப்பதில் திணறக்கூடியவர் என்றே அவரது புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இதை தோனி சரியாக பயன்படுத்திக் கொள்வதில் முனைப்புக் காட்டக்கூடும். அதாவது தொடக்க ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர் களையும் ரிஷப் பந்த் களமிறங்கும் போது சுழற்பந்து வீச்சு ஆயுதத்தை முழுமையாகவும் தோனி பயன்படுத்தக்கூடும்.

பேட்டிங்கில் முதல் ஆட்டத்தில் எளிதான இலக்கையே துரத்திய போதிலும் ஆடுகளத்தின் தன்மை காரணமாக சென்னை அணி வீரர்களும் மந்தமாகவே செயல் பட்டனர்.

ஆனால் இன்றைய ஆட்டத் தில் முதலில் பேட் செய்யும் நிலை ஏற்பட்டால் சென்னை அணி வீரர்கள் கணிசமான வகையில் ரன்கள் குவிப்பது அவசியம். டெல்லி கேபிடல்ஸ் அணியில் கடந்த ஆட்டத்தில் ரபாடா, இஷாந்த் சர்மா, கீமோ பால் ஆகியோர் வேகப்பந்து வீச்சில் பலம் சேர்த்தனர்.

இதில் 150 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறன் கொண்ட ரபாடா, சென்னை பேட்ஸ்மேன்களுக்கு சவால் தரக்கூடும்.

பெரோஷா கோட்லா ஆடுகளம், சுழற்பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால் டெல்லி கேபிடல்ஸ் அணி இன்றைய ஆட்டத்தில் ராகுல் டிவாட்டியாவுடன், அமித் மிஸ்ரா, லமிசான் என 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை – டெல்லி அணிகள் 18 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் சென்னை அணி 12 ஆட்டங்களிலும், டெல்லி அணி 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

பெரோஷா கோட்லா மைதானத்தில் இரு அணிகளும் 6 முறை மோதிய நிலையில் சென்னை அணி 4 ஆட்டங்களிலும், டெல்லி அணி 2 ஆட்டங்களிலும் வெற்றியை பதிவு செய்துள்ளன.

மகேந்திர சிங் தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன், டு பிளெஸ்ஸிஸ், முரளி விஜய், கேதார் ஜாதவ், சேம் பில்லிங்ஸ், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஷோரே, சைதன்யா பிஷ்னோய், ரிதுராஜ் கெய்க்வாட், டுவைன் பிராவோ, கரண் சர்மா, இம்ரன் தகிர், ஹர்பஜன் சிங், மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்குர், மோஹித் சர்மா, கே.எம்.ஆஷிப், டேவிட் வில்லி, தீபக் ஷகார், என்.ஜெகதீசன்.

ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), ஷிகர் தவண், ரிஷப் பந்த், பிரித்வி ஷா, காலின் இங்க்ராம், மன்ஜோத் கர்லா, சேர்பான் ரூதர்போர்டு, அமித் மிஸ்ரா, அவேஷ் கான், பண்டாரு ஐயப்பா, ஹர்ஷால் படேல், இஷாந்த் சர்மா, காகிசோ ரபாடா, நது சிங், சந்தீப் லமிசான், டிரென்ட் போல்ட், அக்சர் படேல், கிறிஸ் மோரிஸ், காலின் மன்றோ, ஹனுமா விகாரி, ஜலஜ் சக்சேனா, கீமோ பால், ராகுல் டிவாட்டியா, அங்குஷ் பெயின்ஸ்.