MP.Ravikumar Speech :
சென்னை: தமிழகத்தில் வேலை வாய்ப்புக்கு காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என்று எம்பி., ரவிக்குமார் கருத்து தெரிவித்துள்ளார் .
அண்மைக்காலமாக, பாஜ ஆட்சி செய்யும் மாநிலங்கள் பலவற்றில் மாநில வேலைவாய்ப்புகளில் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்குவதற்கான சட்டங்கள் இயற்றப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.
கர்நாடகாவில் அப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மாநில அரசு வேலை வாய்ப்புகளும் பிற மாநிலத்தவருக்கு திறந்து விடப்படுகிறது.
ஆனால், மத்திய அரசு அலுவலகங்களில் வட மாநிலத்தவர் கொண்டு வந்து குவிக்கப்படுகின்றனர்.
உதாரணமாக, டிஎன்பிஎஸ்சி குரூப்- 2 தேர்வில் முதல் நிலை தேர்வில் மொழிப்பாடம் அகற்றப்பட்டு இருப்பது ஆகும். இதனால் பிற மாநிலத்தவர்கள் தமிழக இளைஞர்களின் வேலையை வந்து அபகரிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
மேலும் தமிழகத்தில் எந்த ஒரு மாநில அரசு பணிகளுக்கும் பிற மாநிலத்தவர் பங்கேற்க முடியாது என்ற தடை இல்லை.
இதனால், இங்கே படித்து முடித்து வேலை வாய்ப்புக்கு காத்திருக்கும் தமிழக இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது என்று எம்பி., ரவிக்குமார் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: ‘பிற மாநிலங்களில் தமது மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் போது, நமது மாநில அரசு அது பற்றி கவலைப்படாமல் மத்தியில் ஆளும் பாஜவினர் திருப்திபடுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது’ என்று விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் இதன் காரணமாக, மக்கள் தமது உரிமைகளை காத்துக்கொள்ளவே தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மக்கள் போராடுவது, அவர்களை தற்காத்து கொள்வதற்காகவும், ஆக்கரமிப்பில் இருந்து தமிழகத்தை காப்பாற்றி கொள்ளவும் தானே தவிர,. இதை பிரிவினைவாதம் என்று கூறுபவர்கள் தமிழக நலனில் அக்கறை இல்லாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
மத்தியில் தமிழை ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்க வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை மத்திய அரசால் இது பரிசீலிக்கப்பட இல்லை என்பது குறிப்பிடதக்கது. மேலும் நாம் தற்காப்பு போராட்டங்கள் மட்டுமே நடத்தி கொண்டிருப்பதால் நம்மை பலவீனமானவர்கள் என்று அனைவரும் கருதுகின்றனர்.
எனவே, நம்முடைய கோரிக்கைகள் இன்னும் வலுவாக உலக அரங்கில் எடுத்துரைக்கப்பட வேண்டும். அப்படி செய்தால் தான் தமிழை பாதுகாக்க முடியும். மேலும் பிற மாநிலத்தவர்களுக்கு வழங்கும் முன்னுரிமை காரணமாக, தமிழகத்தில் வேலை வாய்ப்புக்கு காத்திருக்கும் தமிழக இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாறு கூறினார்.