Modi government : புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக இந்தியாவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வரும் 7- ஆம் தேதி வெளியிட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில் அனைத்து அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
தேர்தல் அறிக்கைகள் மூலம், மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வகையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட இந்த தேர்தல் அறிக்கையில், “வறுமை ஒழிப்பு, விவசாய கடன்கள் தள்ளுபடி, வேலைவாய்ப்பு மற்றும் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டம்” உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், ஆளுங்கட்சியான பாஜக, வரும் 7-ம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போதும் (2014), இதே நாளில்தான் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, அந்த தேதியையே இந்த முறையும் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை மிஞ்சும் அளவிற்கு, புதிய திட்டங்கள் இடம்பெறும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.