MNM Chief Kamal Haasan : சென்னை: ஓட்டுக்கு என் கட்சியினர் பணம் கொடுத்தாலும் காட்டிக்கொடுப்பேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வழக்கத்தை தடுக்க வேண்டியது நமது கடமை எனவும் தெரிவித்து உள்ளார்.
வரும் 18- ஆம் தேதி நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலையொட்டி நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், மதுபானங்கள், போதைப் பொருட்கள், தங்கம், இலவசப் பொருட்கள் போன்றவைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதன்படி, நாடு முழுவதும் நடத்தப்பட்டு வந்து இதுவரை சோதனையில் சுமார் ரூ.1582.19 கோடி மதிப்புள்ள பணம்,இலவசப் பொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ.270.15 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க தங்கம் உள்ளிட்ட இலவசங்கள் அளிப்பதில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதே..!
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பணம் பறிமுதல் குறித்த கேள்விக்கு கருத்து கூறுகையில்:
“ஓட்டுக்கு என் கட்சியினர் பணம் கொடுத்தாலும் காட்டிக்கொடுப்பேன்!! ” என்று தெரிவித்தார். மேலும் தொற்றுநோய் போல பரவியுள்ள இந்த பணம் கொடுக்கும் வழக்கத்தை தடுக்க வேண்டியது நமது கடமை என கூறினார்.
மேலும் எனது கட்சியில் யாரேனும் அவ்வாறு பணம் கொடுப்பவர்கள் இருந்தால், அவர்களை நீக்குவோம் என கூறினார்.
மேலும் நடிகர் ரஜினியிடம் பேசும்போது ஆதரவு தருவதாக கூறினார், எனவே தேர்தல் பிரசாரத்திற்கு ரஜினி வந்தால் சந்தோஷம் என்று தெரிவித்தார்.