MK Stalin Welcomes – சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் இன்று காலை அறிக்கை வெளியிட்டது.இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வரும் 28-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் ஆணையம் திடீரென ரத்து செய்தது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் தங்கள் ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் ரத்து செய்ததற்கு கஜா புயல் நிவாரண பணிகளை செய்து வருவதுதான் காரணம் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே கஜா புயல் சீரமைப்பு பணிகளை சுட்டிக்காட்டி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற தலைமைச் செயலாளரின் கோரிக்கையை ஏற்று தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: “தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். திருவாரூருக்கு மட்டும் தேர்தல் அறிவித்ததில் உள்நோக்கம் இருந்தது.
புயல் நிவாரண பணி முடிவடையாத நிலையில் தேர்தல் நடந்தால் அது சரியாக இருக்காது. வரும் மக்களவை தேர்தலுடன் இந்த 20 தொகுதியிலும் தேர்தல் நடத்த வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார்.