MKStalin :
சென்னை: சென்னை மாநகரத்தின் அரிய தகவல் களஞ்சியமாகத் திகழ்ந்த எழுத்தாளர் எஸ்.முத்தையா மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுத்தாளர் எஸ்.முத்தையா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை மாநகரத்தின் அரிய தகவல் களஞ்சியமாகத் திகழ்ந்த எஸ்.முத்தையா திடீர் மறைவு செய்தி கேட்டு மீளாத் துயரம் அடைந்தேன்.
மேலும் அவரது மறைவிற்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் பிறந்த இவர் சென்னையின் கலாச்சார மற்றும் வரலாற்று உண்மைகளை விரல் நுனியில் வைத்திருந்தவர்.
மேலும் சென்னை நீள அகலத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் நன்கு அளந்து அறிந்த முத்தையா எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும், மற்றும் ஆசிரியராகவும் சிறப்பாகப் பணியாற்றி மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்தவர் என பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல், சென்னையின் வரலாற்று தகவல்களை பல பத்திரிகைகளில் விரிவாக எழுதி உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு சென்னையின் பெருமைகளை எடுத்துரைத்தவர்.
படிக்கக் கிடைக்காத அரிதான ஒவ்வொரு ஆவணங்களில் இருந்தும் பல்வேறு தகவல்களை திரட்டி அவற்றை அனைத்து வாசகர்களிடமும் தன் எழுத்துத் திறமையால் பகிர்ந்து கொண்டவர் இவர்.
‘மெட்ராஸ் டிஸ்கவர்டு’ போன்ற பல நூல்களை எழுதியவர். முத்தையா மறைவில் சென்னை தன்னைப் பற்றி தகவல் திரட்டும் ஒரு தலைமகனை இழந்திருக்கிறது.
இந்நிலையில் “அவரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.