MK Stalin pays last respect to Nel Jayaraman – சென்னை: “இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் மறைவிற்கு முதல்வர் பழனிசாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்”.
கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கடும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார் இயற்கை விவசாயி நெல் ஜெயராமன்.
அவரது நிலையை உணர்ந்து முதல்வர் எடப்பாடி, மு.க.ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் கார்த்தி, சிவ கார்த்திகேயன், சூரி, விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் எனப் பலரும் நேரில் சந்தித்து, அவரது சிகிச்சைக்கு உதவினர்.
மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் அவரை சென்னைக்கு அழைத்து வந்து அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்.
தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நெல் ஜெயராமன் உடல் நிலை நேற்று மாலை மோசமடைந்தது. இந்நிலையில், அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றினர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5.30 மணியளவில் மரணமடைந்தார். அவரது உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு கொண்டுச்செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் செய்யப்பட உள்ளன.
நெல் ஜெயராமனின் மறைவு தமிழகத்திற்கும், வேளாண்துறைக்கும் பேரிழப்பு என முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும் நெல் ஜெயராமனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வேளாண் பெருங்குடி மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் முதல்வர் பழனிசாமி.
நெல் ஜெயராமன் உடலுக்கு இன்று காலை 11 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நெல்ஜெயராமன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க ஸ்டாலின், ”நெல்ஜெயராமனின் மறைவு ஒட்டுமொத்த விவசாயிகளுக்கு பேரிழப்பாகும். நெல்ஜெயராமனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் ”என்று தெரிவித்தார்.