சென்னை: ரூ.58 கோடி செலவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அமைத்துவரும் நினைவிடத்தை விரைவில் கட்டி முடிக்கும் வகையில் இரவு பகலாக கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அவருக்காக பிரம்மாண்ட நினைவிடம் கட்டி வருகிறது. இதற்காக தமிழக அரசு சுமார் ரூ.58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து சர்வதேச தரத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஜெயலலிதாவின் நினைவிடம் அமைப்பது தொடர்பாக பல முன்னணி கட்டுமான நிறுவனங்கள் தங்களது வடிவமைப்பை, வடிவமைத்து கொடுத்த நிலையில், சென்னை ஐ.ஐ.டி. வடிவமைத்து கொடுத்த வடிவமைப்புப் படி, தற்போது நினைவிடம் கட்டப்படுகிறது. அந்த அமைப்பில் உள்ளவாறு, பீனிக்ஸ் பறவை வடிவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மறைந்த ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் -ம் எவ்வித அக்கறையும் காட்டவில்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில், நினைவிடம் அமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து அதி நவீன கட்டுமான இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு ஜெயலலிதா நினைவிடம் தற்போது உருவாக்கப்படுகிறது. இந்த நினைவிடமானது, ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதிக்குள் கட்டிமுடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது . மேலும், எம்.ஜி.ஆர். நினைவிடத்தை புதுப்பிக்கும் பணிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் புதுபிக்கப்படுவதாலும், ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளதாலும் அதிமுக தொண்டர்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.