Maithripala Sirisena :
கொழும்பு: தீவிரவாத தாக்குதல் குறித்து உளவுத்துறையின் தகவல்களை யாரும் என்னிடம் தெரிவிக்கவில்லை என்று இலங்கை அதிபர் சிறிசேன பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையன்று 3 தேவாலயங்கள், 3 ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன.
மேலும், கொழும்பு பஸ் நிலையத்திலும், சர்வதேச விமான நிலையம் அருகிலும் வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. அடுத்தடுத்த சம்பவங்களால் நாடு முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.
நியூசிலாந்து மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே, இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து இருப்பதாக இலங்கை ராணுவ துணை மந்திரி ருவன் விஜேவர்த்தனே தெரிவித்தார்.
மேலும் இலங்கையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக இந்திய உளவுத்துறை தகவல் தெரிவித்தது.
ஆனால் அதை பொருட்படுத்தாததே இந்த பெருந்துயருக்கு காரணம். உளவுத்தகவல்களை புறக்கணித்ததற்காக மக்களிடம் இலங்கை அரசு மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், “தீவிரவாத தாக்குதல் குறித்து உளவுத்துறையின் தகவல்களை யாரும் என்னிடம் தெரிவிக்கவில்லை” என்று இலங்கை அதிபர் சிறிசேன பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
அதோடு, தகவல் கிடைத்திருந்தால் தேவையான நடவடிக்கை எடுத்திருப்பேன் என தெரிவித்தார்.
மேலும், விரைவில் இலங்கை பாதுகாப்புத்துறை தலைவர்கள் மாற்றப்பட்டு, பாதுகாப்பு பிரிவு முற்றிலும் சீரமைக்கப்படும் என இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்தார்.