Lok Sabha Elections 2019 : கரூர்:கரூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து கரூரில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க தயார் ஆகிவிட்டார்கள்! என கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் கரூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அவ்வாறு பிரச்சாரத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின் பேசியதாவது: மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட போகிறது.
திமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டீர்கள் என்பதற்கு, நீங்கள் திரண்டு இருக்கக்கூடிய இந்த கூட்டமே சாட்சியாக இருக்கிறது என்று கூறினார்.
மேலும் துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு கடைசி வரை சீட் கிடைக்குமா? என்று அதிமுக நிர்வாகிகளுக்கு மட்டுமல்லாமல், அவருக்கே சந்தேகம் இருந்து வந்தது.
ஏனெனில் அதிமுகவில் அவர் எந்த அணியில் இருக்கிறார் என்பது அவருக்கே குழப்பமாக இருந்தது.
மோடியின் கையை காலாக நினைத்துக்கொண்டு வணங்கி கொண்டிருக்கும் அந்த கட்சியில் இருந்து கொண்டு மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று சொன்னவர் நம்மை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் தம்பிதுரை.
அந்த வார்த்தைகளை நான் அவரிடம் இருந்து கடன் வாங்கி இப்போது உங்களிடம் சொல்லப்போகிறேன் என்று கூறினார்.
மேலும் தம்பிதுரை பிரசாரம் செய்யும் போது, 4 வருடமாக ஏன் வரவில்லை? என்று கேட்ட மக்களிடம், அவர் “ஓட்டு போட்டா போடுங்க, இல்லாவிட்டால் போங்க.
உங்கள் காலில் எல்லாம் நாங்கள் விழ முடியாது (!?) என்று கூறியுள்ளார். மக்களிடம் ஓட்டுகள் வாங்கிக்கொண்டு பேசுகிற பேச்சா இது?? “என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார் திமுக தலைவர் ஸ்டாலின்..
அதை தொடர்ந்து பேசிய ஸ்டாலின், மத்தியில் ஆட்சிக்கு வரப்போவது நம்முடைய ராகுல்காந்தி தான்.
எனவே காங்கிரஸ் கட்சி ஆட்சி வந்ததற்கு பிறகு தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி ஒரு நிமிடமாவது நீடிக்குமா?என கேள்வி எழுப்பினார்.
எனவே, உரிமையோடு உணர்வுகளோடு உங்களிடத்தில் ஓட்டு கேட்க வந்திருக்கின்றேன், நீங்கள் வெற்றியை எங்களுக்கு தேடி தர வேண்டும்..இவ்வாறு பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசினார்.