kamal haasan Speech : சென்னை: கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதால் வேலூரில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வேலூரில் சில தினங்களுக்கு முன்பாக துரைமுருகன் இல்லம் மற்றும் அவரது கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைகளை நடத்தினர்.
அப்பொழுது சுமார் 10 லட்சத்துக்கும் மேலாக பணம் மற்றும் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, வேலூர் அருகே உள்ள ஒரு சிமெண்ட் ஆலையில் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனை நடத்தியபோது பல கோடி ரூபாய் கட்டு கட்டாக சிக்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் அதில் எந்த வார்டுக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தகவல்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் வருமான வரி சோதனை காரணமாக வேலூரில் தற்போது தேர்தல் நடத்தப்படுமா(!?) என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தமிழக தேர்தல் அதிகாரியிடம் வருமானவரித்துறையினர் இது தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தனர்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த கமல்ஹாசன் இதுகுறித்து கூறுகையில், “ஓட்டுக்கு எனது கட்சியினர் பணம் கொடுத்தாலும் நான் அதை காட்டிக் கொடுத்து விடுவேன்..! பணம் கொடுத்து வாக்கு கேட்பது அவமானம்..
கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், வேலூர் லோக்சபா தேர்தலை ரத்து செய்ய வேண்டும்..!!” இவ்வாறு தெரிவித்தார்.