நீண்ட வருடங்களாக தமிழ் சினிமாவில் நிலவி வந்த சில பயங்களை கார்த்தியின் கைதி திரைப்படம் தகர்த்து எறிந்துள்ளது.
தமிழ் சினிமா உலகை பொறுத்தவரை, தீபாவளி போன்ற விழாக் காலங்களில் பெரிய ஹீரோக்கள் இருவரின் படங்கள் ஒன்றாக வெளியாகும்.இதற்கு ஏராளமன ரஜினி மற்றும் கமல்ஹாசன் திரைப்படங்களே சாட்சி. அல்லது ஒரு பெரிய ஹீரோவின் படம் வெளியாகிறது எனில், இரண்டாவது வரிசையில் உள்ள ஹீரோக்களின் திரைப்படங்கள் மற்றும் சிறிய நடிகர்களின் படங்கள் வெளியாகாது. ஏனெனில், பெரும்பலான திரையரங்குகளை பெரிய ஹீரோவின் படம் அபகரித்துக்கொள்ள, மற்ற திரைப்படங்களுக்கு திரையரங்குகள் அதிக எண்ணிக்கையில் கிடைக்காது. இதனால், படத்தின் தயாரிப்பாளர் மற்றும் படத்தை வெளியிடும் வினியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு.
ஆனால், இந்த நடைமுறையை கார்த்தியின் ‘கைதி’ திரைப்படம் தகர்த்து எறிந்துள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்ட செலவில் (ரூ.140 அல்லது ரூ.180 கோடி) தயாரித்து, விஜய் நடிப்பில் உருவான பிகில் திரைப்படம் கடந்த 25ம் தேதி வெளியான போது, அதனுடன் கார்த்தி நடிப்பில் குறைவான பட்ஜெட்டில் உருவான ‘கைதி’ திரைப்படமும் வெளியானது.
வழக்கம்போல் பிகிலுக்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டது. பிகில் குறைந்த திரையரங்குகளில் வெளியானது. பல திரையரங்குகளில் கைதிக்கு ஒரு காட்சிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், கைதி படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் நேர்மறையான விமர்சனங்களால் கொஞ்சம் கொஞ்சமாக தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டது. அதோடு, கைதி திரைப்படம் நல்ல வசூலையும் பெற்று வருகிறது. பிகில் திரைப்படத்தை வாங்கிய சில வினியோகஸ்தர்கள் நஷ்டத்தை சந்திப்பார்கள் எனவும், கைதி படத்தால் வினியோகஸ்தர்கள் நல்ல லாபத்தை பெற்றுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
எனவே, பெரிய ஹீரோக்களின் படம் வெளியாகும் சிறிய படங்களின் வெளியீட்டு தள்ளிப்போகும் என காலம் காலமாக இருந்த வந்த நிலைமை கைதி படத்தால் மாறியுள்ளது. இது வரவேற்கத்தக்க மாற்றம். கைதி படத்தின் வெற்றி தயாரிப்பாளர்களுக்கு தைரியத்தை வரவழைத்துள்ளது என தமிழ் சினிமா வட்டாரத்தில் பேச துவங்கியுள்ளனர்.