borewell

புதுக்கோட்டை மாவட்டத்தில் திறந்து கிடந்த ஒரு ஆழ்துளைக்கிணற்றை பத்திரிக்கையாளர்களே மூடியுள்ளனர்.

நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் சர்ஜித் விழுந்து 67 மணி நேரத்திற்கும் மேலாகி விட்டது. பல முயற்சிகளுக்கு பின் தற்போது, சிறுவன் விழுந்த கிணற்றுக்கு அருகே 100 அடி குழி தோண்டி பக்கவாட்டில் சுரங்கம் அமைத்து சிறுவனை மேலே தூக்கும் முயற்சியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

சிறுவன் சர்ஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் பிரார்த்தனையும், விஷேச பூஜைகளும் நடைபெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களில் பலரும் #Prayforsurjith என்கிற ஹேஷ்டேக் மூலம் இந்த விவகாரம் பற்றி பேசி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகமெங்கும் பயன்பாட்டில் இல்லாத அனைத்து ஆழ்துளைக்கிணறுகளை மூட வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. மேலும், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவில்பட்டியில் மூடாமல் இருந்த ஒரு ஆழ்துளைக்கிணற்றின் புகைப்படத்தை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

இது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களே அந்த ஆழ்துளைக்கிணற்றை மூடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ‘இன்னொரு குழந்தைக்கு இப்படி நேராமல் காக்க நாமாக முயன்றால்தான் உண்டு’ என பதிவிட்டு வருகின்றனர்.