jayalalithaa vs sasikala
ஜெ., சசிகலாவுக்கே துரோகம் செய்தவர்கள்.. தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்ய மாட்டார்களா!??
வேலூர்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கே துரோகம் செய்தவர்கள் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்ய மாட்டார்களா?? என்று திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக குறித்து விமர்சனம் செய்துள்ளார்.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்ட போது, அவர் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்த பின்பு ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானோர் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவர் என்று கூறினார்.,
அதனை தொடர்ந்து பேசிய ஸ்டாலின், நாங்கள் யாருடைய மிரட்டலையும் கண்டு அஞ்சமாட்டோம். திமுக ஒரு பனங்காட்டு நரி, சலசலப்புக்கு அஞ்சாது என கூறினார்.
மேலும் மேகதாதுவில் அணை கட்டும் அனுமதியை கர்நாடகாவுக்கு வழங்கிய பாஜக-வுடன் தான் அதிமுக தற்போது கூட்டு வைத்துள்ளது என்று அதிமுகவை விமர்சனம் செய்தார்.
மேலும் மோடியை போன்ற ஒரு மோசமான பிரதமரை இந்தியாவில் யாரும் பார்த்திருக்க மாட்டோம் (!?) என்று கூறிய ஸ்டாலின், தமிழகத்தில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில், 18 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் மத்தியில் மோடியின் சர்வாதிகார ஆட்சியையும், மாநிலத்தில் எடப்பாடியின் எடுபிடி ஆட்சியையும் நீக்க வேண்டும் என்று ஆவேசமாக பேசினார்.
பின்னர் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், என் வீட்டில் ஐடி ரெய்டு நடந்தது பற்றி பேரவையில் முதல்வர் பழனிசாமி பதில் சொல்லியே ஆக வேண்டும், என் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையை, திமுக மீது நடத்தப்பட்ட சோதனையாகவே மக்கள் நினைத்தார்கள் என்று தெரிவித்தார்.