ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் ரஜினிகாந்த் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோலிவுட் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசை அமைத்திருக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா, சிவராஜ்குமார் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் ரஜினியின் போர்ஷனுக்கான எடிட்டிங் முடிந்துவிட்டதால் அவர் டப்பிங் கொடுத்து வருவதாகவும் செய்திகள் சமீபத்தில் வெளியானது. மேலும் ஜெயிலர் படத்திற்காக ஒரு பாடலுக்கு ரிகர்சல் செய்து வருவதாக போட்டோவை தமன்னா தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்திருந்தார்.

ஆனால் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க இருப்பதாகவும் அதற்காக ரஜினியிடம் நெல்சன் 4 அல்லது 5 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஜெயிலர் திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்கள் மட்டும் உள்ள நிலையில், இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.