Indian cricket team : மே மாதம் நடக்கவுள்ள உலக கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கான தேர்வு இன்று மும்பையில் நடக்கஇருக்கின்றன.
ரிஷாப் பன்ட், விஜய் ஷங்கர் ஆகிய இளம் வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்ப்பு உள்ளன.
ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30ல் இங்கிலாந்தில் துவங்குகிறது.
இந்த தொடரில் ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் இடம் பெற்றுள்ளன.
இப்போட்டியில் விளையாடவுள்ள ஒவ்வொரு அணியும், வரும் 23ம் தேதிக்குள், 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவிக்கவேண்டும் என ஐ.சி.சி. அவகாசம் கொடுத்துள்ளது.
இதனையடுத்து மும்பையில் இன்று நடக்கவுள்ள இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) தேர்வுக்குழு கூட்டத்தில் 15 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்படுகிறது.
தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் நடக்கவுள்ள கூட்டத்தில், இந்திய அணி கேப்டன் கோலி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் களமிறக்கப்படலாம். கேப்டன் கோலி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா தங்களது இடத்தை தக்கவைத்துக் கொள்வர்.
‘ரெகுலர்’ விக்கெட் கீப்பர் தோனியுடன், கூடுதலாக ஒரு கீப்பரை தேர்வு செய்வதில் குழப்பம் நீடிக்கிறது.
இளம் வீரர் ரிஷாப் பன்ட், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது.
பிரிமியர் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் ரிஷாப் பன்ட் தேர்வாக அதிக வாய்ப்பு உள்ளது. மூன்றாவது துவக்க வீரராக லோகேஷ் ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
அதனை அடுத்து நான்காவது இடத்தில் யாரை களமிறக்குவது என்பதில் நீண்ட நாள் தலைவலியாக உள்ளது.
இதற்கு அம்பதி ராயுடுவை தேர்வு செய்யலாம் என கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எண்ணுகின்றனர். ஆனால், ‘வேகத்திற்கு’ எதிரான இவரது ஆட்டம் திருப்தியாக இல்லை. இதனால் தமிழக ‘ஆல் ரவுண்டர்’ விஜய் ஷங்கர் வாய்ப்பு பெறலாம்.
பும்ரா, புவனேஷ்வர், ஷமி இருந்தாலும் நான்காவது வேகப்பந்துவீச்சாளர் தேவைப்படுகிறார்.
உமேஷ் யாதவ், கலீல் அகமது, இஷாந்த் சர்மா, தீபக் சகார் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
கணிப்பு அணி: கோலி (கேப்டன்), ரோகித் (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், தோனி, ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, விஜய் ஷங்கர், குல்தீப், சகால், பும்ரா, புவனேஷ்வர், ஷமி, ஜடேஜா.