Income tax department raid : சென்னை: வேலூரில் வருமான வரித்துறை நடத்தும் சோதனை இன்னும் முடியவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் பேட்டி அளித்த, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு கூறியதாவது,
‘தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதியன்று தேர்தல் விதிகளை மீறியதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் சுமார் ரூ.2.23 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை மொத்தம் ரூ.80.35 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
அதேபோன்று, ரூ.132 கோடி மதிப்புள்ள 468 கிலோ தங்கம், ரூ.1.70 கோடி மதிப்புள்ள 414 கிலோ வெள்ளி உள்பட ரூ.135 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் வேலூர் திமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. மேலும் வேலூரில் நடைபெற்ற வருமான வரித்துறை நடத்தும் சோதனை இன்னும் முடியவில்லை’ என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அந்த சோதனை தொடர்பாக எந்த தகவலும் எங்களுக்கு தரப்படவில்லை. சோதனை முழு அளவில் முடிந்த பிறகுதான் எங்களுக்கு அறிக்கை தருவார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் அங்கு தொடர்ந்து சோதனை நடைபெறுவது, வருமான வரித்துறையின் சட்டவிதிகளின்படி மேற்கொள்ளப்படுகிறது. அது எத்தனை நாள் நடத்தப்படும் என்பதெல்லாம் அவர்களின் முடிவுக்கு உட்பட்டது என கூறினார்.
மேலும் வருமான வரித்துறை சோதனை நடத்தும் பகுதியில், செலவினப் பார்வையாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நேரடியாக அறிக்கை அளிப்பார்கள்.
தலைமை தேர்தல் அதிகாரி, வருமான வரித்துறை ஆகியோரும் அறிக்கை அளிப்பார்கள்.
அதை வைத்து இந்திய தேர்தல் ஆணையம் ஒரு முடிவுக்கு வரும். சென்னைக்கு வரும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இதுபற்றி வருமான வரித்துறையிடம் ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.