
Heavy Rain in TN – சென்னை: வங்க கடலில் உருவாகி இருக்கும் புயல் காரணமாக, ‘வடதமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்யும்’ என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மீனவர்களை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர்.
தற்போது, தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது, “தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத தாழ்வு மண்டலம் வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.இது நேற்று சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 930 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது!
இந்நிலையில், தற்போது மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்கிறது; இன்று அது புயலாக வலுப்பெற உள்ளது..
இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் இது, தீவிர புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது; இந்தப் புயல் வருகிற 17-ம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, வடதமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம்.
மேலும் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்; தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். அதனால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” இவ்வாறு கூறினார்.