Hanuma Vihari Speech
Hanuma Vihari Speech

Hanuma Vihari Speech – இப்போது உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் நிரப்ப இந்திய தேர்வு குழு குழப்பத்தில் இருந்தது.

அந்த குழப்பத்தை தற்போது இளம் மிடில் ஆர்டர் வீரர் ஹனுமா விஹாரி சற்றே தெளிவு செய்து உள்ளார். இவர் 2013 மற்றும் 2015-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் பங்கேற்றார். ஆனால் மிகப்பெரிய அளவில் பிரகாசிக்கவில்லை.

தற்போது 25 வயது கொண்ட ஹனுமா விஹாரியை இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது சர்வதேச அணியில் அறிமுகம் செய்தது இந்திய கிரிக்கெட் வாரியம்.

அந்த போட்டியில் முதல் டெஸ்டில் அரைசதம் அடித்து அசத்தினார். இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மூன்று போட்டிகளில் களம் இறக்கப்பட்டார்.

இந்நிலையில் வரும் ஐ. பி. எல். தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி அவரை 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

இளம் வீரர்களை கொண்ட டெல்லி அணியில் ஹனுமா விஹாரிக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் எனது திறமையை வெளிப்படுத்த 3 வருடமாக காத்திருக்கிறேன் என்று ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.

ஹனுமா விஹாரி கூறியது :

‘‘என்மீது எந்தவித நெருக்கடியும் இருப்பதாக கருதவில்லை. கடந்த மூன்று வருடங்களாக நான் எப்படிபட்ட கிரிக்கெட் வீரராக மாறியுள்ளேன் என்பதை நிருபிக்க இது சிறந்த வாய்ப்பு.

மூன்று வருடம் இடைவெளிக்குப்பின் ஐபிஎல் தொடருக்கு திரும்புவதால் 2 கோடி ரூபாய்க்கு தகுந்த வகையில் விளையாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். இருந்தாலும் அது எனது ஆட்டத்தை பாதிக்காது.

என்னுடைய ஒரே இலக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வெற்றியில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதுதான்.

அணியாக எங்களுடைய உச்சக்கட்ட கனவு கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதுதான்’’ என்றார்.

மேலும், இரானி கோப்பையில் ஹாட்ரிக் சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை விஹாரி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.