Group 2 Exam : குரூப் 2 தேர்வு நாளை நடக்கவிருக்கிறது.
வெறும் 1,199 காலிபணியிடங்களுக்கு நடக்கவிருக்கும் தேர்விற்கு 6.20 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு நடக்கும் மையங்களில் செல்போன், கால்குலேட்டர் போன்ற மின்னணு பொருட்கள் கொண்டுசெல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தேர்வுக்கு 1,199 காலியாக உள்ள பணியிடங்களுக்கு (நேர்முக தேர்வு) கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிட்டது.
அன்று முதல் விண்ணப்பம் இணையதளத்தில் விண்ணப்பிக்க துவங்கப்பட்டது. செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
இதில் இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் உட்பட 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான எழுத்து தேர்வு நாளை (11.11.2018) காலை நடக்கவிருக்கிறது. இந்த தேர்விற்காக 2,268 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையை பொறுத்தவரை 248 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெற உள்ளது. நாளை காலை 10 மணிக்கு நடக்கவிருக்கும் இந்த தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். தேர்வு கண்காணிப்பு பணியில் மட்டுமே 6 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.
தேர்வு மையங்களில் செல்போன் கால்குலேட்டர் போன்ற மின்னணு சாதனங்கள் கொண்டு வர அனுமதி இல்லை.
மேலும், தேர்வு எழுதுபவர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
நாளை நடக்கவிருக்கும் தேர்விற்காக தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு எழுதுவோர் தவிர வேறு எவரும் தேர்வு மையங்களில் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.