சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் முதல் காட்சியை பார்க்க வரும் ரசிகர்களுக்கு இயக்குனர் கௌதம் மேனன் ஒரு வேண்டுகோள் வைத்து இருக்கிறார். அது தற்பொழுது வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் சிம்பு. இவர் தற்போது கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் டாக்டர். ஐசரி கே.கணேஷ் தயாரிக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் வழங்கவுள்ளது.

இதில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இட்னானி நடிக்க ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்,டீசர் மற்றும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதியான நாளை இப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் காட்சி சில இடங்களில் அதிகாலை 4.30 மணிக்கும் சில இடங்களில் 5 மணிக்கும் தொடங்குகிறது.

இப்படத்தை காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வரும் நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் முதல் காட்சியை பார்க்க வரும் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கிறார். அதில் அவர், ” வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் நாள் முதல் (5 மணி) காட்சியை பார்க்க வரும் ரசிகர்கள் நன்றாக தூங்கிவிட்டு படத்தை பார்க்க வாருங்கள். எதற்காகவென்றால், கதை மற்றும் கதாபாத்திரத்தின் ஓட்டம் செட் ஆக கொஞ்சம் நேரம் எடுக்கும்” என்று வேண்டுகோள் வைத்துள்ளார். தற்போது இந்த தகவல் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.