Gambhir

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினர் பேருந்தில் சென்றனர். அப்போது, அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து சென்ற போது, அதன் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படை தீவிரவாதி 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச் செய்தார்.

இந்தத் தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த 45 சிஆர்பிஎப் வீரர்களால் 44 பேர் கொல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை ஒரு வீரர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 38 சிஆர்பிஎப் வீரர்கள், பாதாமிபாக் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏராளமான வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் தீவிரவாதத் தாக்குதலுக்கு பல்வேறு மாநில முதல்வர்களும் அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இந்த வகையில், கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஆம், பிரிவினைவாதிகளுடன் பேசுவோம். ஆம், பாகிஸ்தானுடனும் பேசலாம். ஆனால் பேச்சுவார்த்தை, மேசையைச் சுற்றி இருக்கக் கூடாது. போர்க்களத்தில்தான் இருக்கவேண்டும். இதுவரை பொறுத்தது போதும். ஸ்ரீநகர் – ஜம்மு நெடுஞ்சாலையில் நடந்த குண்டுவெடிப்பில் சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

இவரை தொடர்ந்து மற்றும் பல விளையாட்டு வீரர்களும் தங்களின் வருத்தம் மற்றும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தது தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.