YouTube video

EPS Speech in Fortis Health Care Hospital : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைந்துள்ள அதிமுக அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது. முதல்வர் பழனிசாமி தமிழக மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து சிறப்பாக செயலாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இன்று இவர் சென்னை வடபழனியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையின் புதிய கிளையை திறந்து வைத்துள்ளார்.

இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மற்றும் மருத்துவப் பணியாளர்களை வரவேற்று பேசினார்.

மேலும் பல ஆண்டுகளாக மக்களின் நலனுக்காக செயல்பட்டு வரும் Fortis ஹெல்த் கேர் நிறுவனத்தின் சேவையை பாராட்டினார்.

“நலமான மாநிலமே, வளமான மாநிலம்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில், ஏழை எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், மக்கள் வாழும் பகுதிகளுக்கு அருகிலேயே தரம் வாய்ந்த மருத்துவ வசதி கிடைக்க வழிவகை செய்தல், தொழில்நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தி உயர்தர மருத்துவ வசதிகள் அளித்தல் போன்ற பல முன்னோடித் திட்டங்களை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில், தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகின்றேன்.

 முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், வளர் இளம் பெண்களுக்கான சுகாதாரத் திட்டம், பிரசவ உடனாளர் திட்டம், அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம், அம்மா ஆரோக்கிய திட்டம், அம்மா மகப்பேறு சஞ்சீவித் திட்டம், அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் மகளிருக்கான அம்மா மகளிர் முழு உடல் பரிசோதனை திட்டம், நடமாடும் மருத்துவமனை திட்டம், அம்மா மருந்தகம் போன்ற தடுப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் சிகிச்சை அளிக்கும் திட்டம், உயர்நிலை மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல், 108 அவசர கால ஊர்தி சேவை, இரத்த வங்கிகள், விபத்து சேவை மையங்ளுடன் கூடிய உயர் சிறப்பு மருத்துவமனைகளை நிறுவுதல் போன்ற பல முன்னோடி திட்டங்களை அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது.

 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செயல்படும் சிமாங்க் மையங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

 தாய்சேய் நலப் பிரிவுகள் ஒப்புயர்வு மையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

 டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இரண்டு பேறுகாலம் வரை 18,000 ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக அளவாக தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுவது இத்திட்டத்தின் வெற்றியை காட்டுகிறது.

 கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் 16ல் இருந்து 15 ஆகவும், பேறுகாலத்தில் தாய்மார்களின் இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரையில், 2030-ல் அடைய வேண்டிய நீடித்த நிலையான இலக்குகளை இப்போதே அடைந்து விட்டோம் என்பது ஒரு சரித்திர சாதனையாகும்.

 மாண்புமிகு அம்மாவின் ஆட்சியில், 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. 30 படுக்கை வசதி, ஸ்கேன் போன்ற வசதிகளுடன் 166 ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிலை உயர்த்தப்பட்டுள்ளன.

 இதன் தொடர்ச்சியாக, 32 ஆரம்ப சுகாதார நிலையங்களில், நவீன இணையவழி கண் பரிசோதனை மையங்கள், மாவட்டத்திற்கு ஒன்று வீதம், ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளுக்கு 56 சி.டி.ஸ்கேன், 22 எம்.ஆர்.ஐ. ஸ்கேன், 18 கேத்லேப் மற்றும் 530 டயாலிசிஸ் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

 தமிழ்நாடு அரசு, அரசு மருத்துவமனைகளில் புற்று நோய்க்கு உயரிய சிகிச்சை அளிக்கும் வகையில் 190 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 அரசு மருத்துவமனைகளில் Linear Accelerator என்ற உயர் தொழில் நுட்பக் கருவி நிறுவப்பட்டு வருகிறது.

 சென்னை அடையாறு, புற்றுநோய் மையத்தை 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில அளவில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்தும் பணி, நிறைவடையும் தருவாயில் உள்ளது.

 59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு புற்றுநோய் மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 காஞ்சிபுரம், காரப்பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில்மேன்மைமிகு மையம் ஏற்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

EPS Speech in Fortis Health Care Hospital Opening

 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு 5 வருடங்களாக தொடர்ந்து தேசிய அளவில் மிகச் சிறந்த மாநில விருதைப் பெற்று வருகிறது. உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மருத்துவமனைக்கான விருது, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

 தேசிய தர உறுதி திட்டத்தின் கீழ், சிறந்த செயல்பாடுகளுக்காக தமிழ்நாட்டில் உள்ள 26 அரசு மருத்துவமனைகள் மற்றும் 47 ஆரம்ப சுகாதார நிலையங்களும் தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசால் பாராட்டு சான்றிதழும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளன.

 உயர்தர மருத்துவ சேவைகளை வழங்குவதில் மட்டுமல்லாது, மிகச் சிறந்த மனித வளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்தித்தருவதிலும், தமிழ்நாடு இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரி மாநிலமாக திகழ்ந்து வருகின்ற காரணத்தினால், தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக விளங்குகின்றது.

 மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகளை அளிப்பதில், அரசு மருத்துவமனைகளோடு, தனியார் மருத்துவமனைகளும் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இன்றைக்கு தரமான மருத்துவ சிகிச்சை குறைந்த செலவில் பெறுவதற்காக, வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், அதிக எண்ணிக்கையில் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். இதன் மூலம், தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது என பேசினார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.