ஒத்த செருப்பு திரைப்படம் தொடர்பாக ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ள கருத்து அப்படத்தின் நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்திபனுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தான் மட்டும் நடித்து ஒரு வித்தியாசமான கோணத்தில் பார்த்திபன் இயக்கியுள்ள திரைப்படம் ஒத்த செருப்பு. இப்படம் கடந்த மாதம் 20ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டியிருந்தனர். அதேபோல் சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரிலும் இப்படத்தை பார்த்த பலரும் படத்தையும், பார்த்திபனையும் பாராட்டி டிவிட் செய்து வருகின்றனர். அப்படி வரும் சிறப்பான பாராட்டுகளுக்கு பார்த்திபன் தொடர்ந்து நன்றி தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், ஒரு ரசிகர் ‘என்னால ஒத்தசெருப்பு திரைப்படத்தை தியேட்டர்ல பார்க்கும் சூழ்நிலை இல்லை. என் 10 மாத பெண் குழந்தை பார்க்க விடமாட்டாள். ஆனால், இது என் பங்கு.. உங்கள் படைப்பிற்கு.. தியேட்டர்ல பார்க்க முடியாத படத்திற்கு டிக்கெட்! காணிக்கை, மரியாதை, அன்பளிப்பு!’ எனக்கூறி ஒரு திரையரங்கில் ஆன்லைனில் டிக்கெட் செய்ததை பகிர்ந்திருந்தார். 2 டிக்கெட்டுகளை புக் செய்து 375.90 ரூபாயை அவர் செலுத்தியிருந்தார். இதைக்கண்டு நெகிழ்ந்து போன பார்த்திபன் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் பெங்களூரில் உள்ள ஒரு தியேட்டரில் கண் தெரியாத 4 பேர் இப்படத்தை பார்த்து (கேட்டு) படம் முடிந்ததும் எழுந்து கைதட்டிய சம்பவத்தை ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் ஒத்த செருப்பு திரைப்படம் பார்த்திபனுக்கு ரசிகர்களுடனான பல நெகிழ்ச்சியான அனுபவங்களை கொடுத்துள்ளது.
நன்றி வினோத குமார்! https://t.co/WzkGKmfzpA
— R.Parthiban (@rparthiepan) October 15, 2019