Fake Vote :
புதுடெல்லி: நாடு முழுவதும் கள்ள ஓட்டுக்களை தடுக்க வாக்காளர் அடையாள அட்டை- ஆதார் எண் இணைக்க கோரி, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தலைமை தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
நாடு முழுவதும் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கவும், ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் பெறுவதை தடுத்திடவும், போலி வாக்காளர் அட்டைகள் மூலம் கள்ள ஓட்டு போடப்படுவதை தடுக்கவும், தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான முயற்சியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
மூன்றே மாதத்தில் 13 கோடி பேரின் ஆதார் தகவல்கள் பெறப்பட்டன. ஆனால், அதே ஆண்டு ஆகஸ்டு மாதம், தேர்தல் ஆணையத்தின் முயற்சிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்துழைக்கவில்லை.
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தபால் ஓட்டு போட நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை!!
ஆதார் கட்டாயமாக்கப்படுவது தொடர்பான வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், “தனி மனித சுதந்திரம் காப்பது அடிப்படை உரிமை, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் தகவல்களை இணைப்பதற்கான சட்டம் இயற்றப்படுவதன் மூலமாக இதனை நெறிபடுத்த முடியும்” என்று உத்தரவிட்டது. இதன் காரணமாக, ஆதார் எண் சேகரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில், வாக்காளர் அடையாள அட்டை- ஆதார் எண் இணைக்க வேண்டும் என முக்கிய அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் உட்பட பல்வேறு தரப்பினரும் தற்போது கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே மீண்டும் வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான முயற்சிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை எழுதியது. அதில், “ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைப்பதன் மூலம் போலி வாக்காளர்களை எளிதில் நீக்க முடியும்.
இதற்காக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950, ஆதார் சட்டம் ஆகியவற்றில் தேவையான திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். ஏற்கனவே, வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களிடம் ஆதார் எண்ணை பெறவும், புதிதாக விண்ணப்பம் செய்பவர்களிடம் ஆதார் எண் பெறவும் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
அதே சமயம், ஆதார் இல்லை என்பதற்காக ஒருவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது. மேலும் ஆதார் இல்லாதவருக்கு வாக்காளர் அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் தராமலும் இருக்க மாட்டோம்,” என தேர்தல் ஆணையம் அக்கடிதத்தில் பரிந்துரை செய்துள்ளது.இந்நிலையில் இது தொடர்பாக சட்ட அமைச்சகம் தீவிர பரிசீலனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.