Facebook and Twitter :
சென்னை: ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களின் குறைகள், புகார்கள் முதலியவற்றை கேட்டறிந்து, அதற்கு தீர்வு காணும் புதிய முயற்சியை மேற்கொள்ள உள்ளதாக சென்னை மாநாகராட்சி தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவும், பொதுமக்களின் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணவும் சென்னை மாநாகராட்சி பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி அதனை செயல்படுத்தி வருகிறது.
‘நம்ம சென்னை’ செயலி, 1913 என்ற தொலைபேசி எண் உள்ளிட்டவை மூலம் பொதுமக்கள் புகார்களை பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 12 லட்சம் வீடுகளும், பல்வேறு வணிக நிறுவனங்களும் உள்ளன.
மேலும் மக்களின் புகார்களை உடனுக்குடன் கேட்டு அதற்கான தீர்வுகளை செய்ய, பல வழிகளில் சென்னை மாநகராட்சி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் சமூகவலைதளங்கள் மூலம் பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருக்க மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சென்னை மாநகராட்சிக்கென பக்கங்கள் உருவாக்கப்பட உள்ளன.
அவற்றில் பொதுமக்கள் தங்கள் புகார்கள், கருத்துகளை பதிவு செய்யலாம். மேலும் புகார்கள் மீது தீர்வு காணப்பட்டு, அது தொடர்பான தகவல்கள் புகார்தாரர்களுக்கே நேரடியாக தெரிவிக்கப்படும்.
ஒத்த செருப்புக்கு கிடைத்த பாராட்டு… பேச முடியாமல் அழுத பார்த்திபன்.. நெகிழ்ச்சி வீடியோ
அதுமட்டுமின்றி சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவை உள்ளிட்டவை குறித்து டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் விளம்பரம் வெளியிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் சமூக வலைதளங்களை அதிகளவில் பயன்படுத்துவதால், இந்த திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதற்காக 15 நாட்களுக்குள் டெண்டர் கோரப்பட்டு 3 மாதங்களில் திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. மேலும் இந்த திட்டத்துக்காக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.