Edappadi Palanisamy :
வேலூர்: வேலூர் தொகுதியில் நடந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தற்சமயம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அதிமுக வெற்றிபெற சாதகமான சூழ்நிலை தற்போது உருவாகி உள்ளது. இதன் மூலம் அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கி உள்ளது.
கடந்த 5 ஆம் தேதி, வேலூர் லோக்சபா தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக சார்பாக கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பாக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்,நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உட்பட 28 பேர் போட்டியிட்டனர்.
இந்நிலையில் வேலூர் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்சமயம் நடைபெற்று வருகின்றது.
அதில் அதிமுக சார்பாக போட்டியிடும் நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்து வருகிறார். யார் வெற்றியாளர் என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. அதிமுக கட்சி வெற்றிபெறும் பட்சத்தில் அது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அதிமுக கட்சியில் நிறைய குழப்பங்கள், சிக்கல்கள் நிகழ்ந்து வருகிறது.
மேலும் கட்சி இரண்டாக பிரிந்து, பின் மூன்றாக பிரிந்து பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர் அணிகள் எல்லாம் இணைந்து, அதிமுக இரட்டை தலைமையின் கீழ் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தொடக்கத்தில் அமைதியாக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார். முக்கியமாக, நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுக்கு பின் கட்சி அவரின் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது என்றே கூறலாம்.
கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது.ஆனால் லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தாலும் சட்டசபை இடைத்தேர்தலில் 22 தொகுதியில் 9 தொகுதியில் வென்று சிறப்பாக ஆட்சியை தக்க வைத்தது.இதன் மூலம் அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.
இந்நிலையில் தற்போது வேலூர் தொகுதியில் நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக வெற்றிபெற சாதகமான சூழ்நிலை உருவாகி உள்ளது.
இதன் மூலம் அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கை மேலும் ஓங்கும். மேலும் அதிமுகவின் ஒரே ஒரு எம்பியாக துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஓ.பி. ரவீந்திரநாத்தான் இருந்தார். தற்போது அது மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் இத்தனை மாற்றங்களையும் ஏற்படுத்தியவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
மேலும் ஜெயலலிதா இன்றி இவ்வாறு அதிமுகவில் பல மாற்றங்களை செய்து இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்பது குறிப்பிடத்தக்கது.