DMK president Stalin
DMK president Stalin

DMK president Stalin – சென்னை: “நிர்வாணப் போராட்டங்களை கைவிட்டு நாகரீகமாக போராட்டங்களில் ஈடுபட்டு விவசாயிகள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும்”என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று நாடு முழுவதும் விவசாயிகள் ஒன்றிைணைந்து போராட்டத்தை நடத்தி, டெல்லி பாராளுமன்றத்தை நோக்கி பிரமாண்ட பேரணியில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த பேரணியில் தமிழ்நாட்டை சேர்ந்த விவசாயிகள் சிலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், விவசாயிகள் இப்படி போராடும் நிலை அமைந்ததற்கு காரணம் பாஜக அரசுதான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாடியுள்ளார்.

மேலும், இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, “விவசாயிகளின் எந்த கோரிக்கையையும் பரிசீலனை செய்யாமல்,அவற்றை நிறைவேற்ற மறுத்து, அறவழி அமைதி போராட்டங்களையும் துளியும் மதிக்காமல் பாஜ அரசு அலட்சியப்படுத்தி கொண்டிருக்கிறது.

பா.ஜ.க. அரசின் இந்த ஆணவப் போக்குதான் விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு காரணம்.

விவசாயிகளின் கோரிக்கைகளை உதாசீனப்படுத்தும் மத்திய – மாநில அரசுகளின் போக்கு கண்டனத்திற்குரியது.

இருப்பினும், “விவசாயிகள் தங்கள் அறவழிப் போராட்டங்களை அமைதியாகவும், நாகரீகமாகவும், நமது பண்பாட்டுக்கு எவ்விதக் குறைவும் ஏற்பட்டு விடாமலும் நடத்திட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்”.

தமிழ்நாட்டின் பாரம்பரிய சீர்மிகு பண்புகளுக்கு பங்கம் ஏற்படும் வகையில், மேலும், தமிழக மக்களே முகம் சுழிக்கும் வகையிலும் நடைபெறும் நிர்வாணப் போராட்டங்களை திமுக சார்பில் நிச்சயம் ஏற்றுக் கொள்ளவோ ஆதரிக்கவோ இயலாது.

இத்தகைய போராட்டமுறைகள், போராட்டத்தின் மைய நோக்கத்தை திசைதிருப்புவதாக அமைந்துவிடும் என்பதை விவசாயிகள் சற்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

எனவே, இதுபோன்ற நிர்வாணப் போராட்டங்களை தயவு செய்து கைவிட்டு, தமிழகத்தின் மாண்பையும், மதிப்பையும் மேலும் போற்றிப் பாதுகாக்கும் வகையில் ஜனநாயக ரீதியிலான, நாகரீகமான அறவழி அமைதியான போராட்டங்களில் ஈடுபட்டு விவசாயிகளின் ஒட்டுமொத்த வேதனைக்குரலை வெளிப்படுத்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.