Criticism for Rajini's speech Criticism for Rajini's speech in Namadhu Ammain Namadhu Amma
Criticism for Rajini's speech in Namadhu Amma

சென்னை: கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கி சூப்பர் ஸ்டாராவோம் என ரஜினி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’ நாளிதழ் ரஜினிக்கு பதிலடி கொடுத்து உள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை சிறப்பிக்க, கமல்-60 என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், “முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி, 2 ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்” என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் முதல்வர் பழனிசாமி ஆட்சி, 4 அல்லது 5 மாதங்களில் கவிழ்ந்து விடும் என 99 சதவீத மக்கள் கூறினார்கள்., ஆனால் அனைத்து தடைகளையும் மீறி ஆட்சி தொடர்ந்து நடந்து வருகிறது. அதுமாதிரியான அதிசயம், நேற்று நடந்தது, இன்று நடக்கிறது, நாளையும் நடக்கும் என தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் இந்த பேச்சிற்கு பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அதிமுக அமைச்சர்கள் பலர் ரஜினிகாந்தின் இந்த பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அதிமுக கட்சியின் நாளிதழான ‘நமது அம்மா’ நாளிதழ் ரஜினியின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்து உள்ளது. ‘நமது அம்மா’ நாளிதழில், “ரீல் தலைவர்களுக்கு மத்தியில் முதல்வர் பழனிசாமி ரியல் தலைவராக இருக்கிறார். சினிமாவில் வாய்ப்பு இல்லை என்றால், ஒரே ஒரு சினிமாவில் நடித்து புகழ் கிடைத்தால் கூட ரீல் தலைவர்கள் அரசியலுக்கு(!?) வர நினைக்கிறார்கள்.,முதல்வராக ஆசைப்படுகிறார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கஷ்டப்பட்டு முன்னேறியவர். ஒரு தொண்டன் தலைவன் ஆக முடியும். தமிழ் உலகை ஆள முடியும் என்று நிரூபித்தவர்., அவர் மக்களுக்கு சேவை செய்து முன்னேறியவர் என்று தெரிவித்திருந்த நாளிதழில், ‘ரஜினி நடத்துனராக பணியை தொடங்கினார்., அவரும் கூட தான் ஒரு “சூப்பர் ஸ்டார்” ஆவோம் என்று கனவில் நினைத்திருக்க மாட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காலம் கொடுக்கும் வாய்ப்பை பயன்படுத்தி உழைப்பவர்கள் முன்னேறுவார்கள். அப்படித்தான் முதல்வர் பழனிசாமியும் முன்னேறினார்” என்று நமது அம்மா நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஜினியின் கருத்துக்கு பதிலடி தரும் வகையில் இவ்வாறு நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.