ஒரே கயிற்றில் கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்பத்தூர் மாவட்டம் கருத்தம்பட்டி அருகேயுள்ள பொண்ணாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கேசவராஜ். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஊட்டியை சேர்ந்த கிருத்திகா என்ற பெண்ணை ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். கேசவராஜின் தாய் மற்றும் தந்தையோடு அனைவரும் கூட்டுக் குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை வெகுநேரமாகியும் கேசவராஜ், கிருத்திகா ஆகியோர் தங்கியிருந்த அறை திறக்கப்படவில்லை. பெற்றோர்கள் கதவை தட்டிப்பார்த்தும் எந்த பதிலும் வரவில்லை. எனவே, உட்பக்கம் சாத்தப்பட்டிருந்த ஜன்னலை உடைத்து பார்த்த போது ஒரே கயிற்றில் இருவரும் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர். இதைக்கண்டு கேசவராஜின் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த கருமத்தம்பட்டி காவல் துறையினர் அங்கு வந்த இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கேசவராஜின் பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.