மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் 5.10.2020 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு புதுமை நிதி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், 1 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூம்புகார் மெய்நிகர் தோற்ற விற்பனை நிலையம் மற்றும் மெய்தோற்ற கைப்பேசி செயலியை துவக்கி வைத்தார்கள்.
CM EPS Opened New Bulidings in Tamilnadu : “பூம்புகார்” என அனைவராலும் அறியப்படும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், பொதுத் துறை நிறுவனமாக தொடங்கப்பட்டு, 1973ஆம் ஆண்டு முதல் வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக கைவினைஞர்களின் கடுமையான உழைப்பினால் பித்தளை, பஞ்சலோகம், மரம், கல் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட தனித்தன்மை வாய்ந்த கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்துவதோடு, கைவினைஞர்களின் திறமையை மேம்படுத்த பயிற்சி அளித்தல், கைவினைஞர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரத்தை உயர்த்துதல், வடிவமைப்புகளில் புதுமையை ஊக்குவித்தல், கைவினைஞர்களுக்கு சமூக பொருளாதார பாதுகாப்பு அளித்தல் போன்றவற்றை முக்கிய குறிக்கோள்களாக கொண்டு
செயல்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட பூம்புகார் மெய்நிகர் தோற்ற விற்பனை நிலையம் மூலம் தமிழக கைவினைஞர்களால் தயாரிக்கப்படும் பொருட்களை வாடிக்கையாளர்கள் எந்த இடத்திலிருந்தும் முப்பரிமாண முறையில் பார்க்க முடியும். இந்த மெய்நிகர் தோற்ற தொழில் நுட்பத்தை விமானநிலையம், வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகமாக கூடுகின்ற இடங்களில் அமைத்து கைவினைப் பொருட்களை எளிதாக சந்தைப்படுத்த இயலும். குறிப்பாக வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் நடத்தப்படும் கண்காட்சிகளில் மெய்நிகர் தோற்ற தொழில்நுட்பம் மூலம் அக்கைவினைப் பொருட்களை அந்த இடங்களுக்கு எடுத்துச் செல்லாமலே, அவற்றை முப்பரிமான வடிவமைப்பில் வாடிக்கையாளர்கள் பார்த்து இணையதள வழியாக
வாங்கக்கூடிய வசதி இதில் செய்யப்பட்டுள்ளது. இத்தொழில்நுட்பம் தமிழ்நாட்டு கைவினைப் பொருட்களை உலகளவில் சந்தைப்படுத்த உறுதுணையாக இருக்கும்.
மேலும், தமிழ்நாட்டு கைவினைப் பொருட்களை தேசிய மற்றும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்தும் வகையில், புதிய முயற்சியாக தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் மெய்தோற்ற கைப்பேசி செயலி மூலம், கைவினைப் பொருட்களை முப்பரிமாணத்தில் காட்சிப்படுத்தி, அலுவலகம், வீடு மற்றும் தேவைப்பட்ட இடங்களில் அலங்கரித்து காட்டி கைவினைப்பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து கைப்பேசி வாயிலாகவே விற்பனை ஆணைகளை பெற முடியும்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை அமைச்சர் திரு. டி.ஜெயக்குமார், மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் திரு. பா. பென்ஜமின், தலைமைச் செயலாளர் திரு.க. சண்முகம், இ.ஆ.ப., கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் திரு. ஷம்பு கல்லோலிகர், இ.ஆ.ப., தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின்மேலாண்மை இயக்குநர் திருமதி வி. ஷோபனா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் 5.10.2020 அன்று தலைமைச் செயலகத்தில், உள்(போக்குவரத்து) துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் (பகுதி) அலுவலகத்திற்கு 1 கோடியே 86 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார்கள்.