நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. ஏராளமான பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கையில் வைத்திருக்கும் இவர் வைகைப்புயல் என அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறார். தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பல படங்களில் காமெடியனாக நடித்து வரும் இவர் கதாநாயகனாகவும் அண்மையில் வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இப்படத்தை தொடர்ந்து வடிவேலுவின் அடுத்தடுத்த படங்களை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா (87) உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்திருப்பதாக வெளியான செய்தி அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நடிகர் வடிவேலுவிற்கு, சினிமா பிரபலங்கள், அவரது ரசிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாள் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், இரங்கல் செய்தியையும் வெளியிட்டுள்ளார்.அதில் நடிகர் வடிவேலு அவர்களின் அன்புத்தாயார் திருமதி. சரோஜினி அம்மாள் (எ) பாப்பா மதுரை விரகனூரில் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். அவரது இழப்பால் வாடும் ‘வைகைப் புயல்’ நடிகர் வடிவேலு அவர்களுக்கும் , குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.