Chennai Weather Live Updates – சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அடுத்த 2 நாட்களில் மழை குறைய வாய்ப்புள்ளது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் பேசியதாவது, “தமிழகத்தின் உள் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, காற்றுமண்டல மேலடுக்கு சுழற்சி ஆக குமரி பகுதியில் நிலவி வருகிறது.
எனவே அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமாக மழை பெய்யும்.
ஆனால், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று கூறினார்.
மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களில் மழையின் அளவு படிப்படியாக குறைய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது என்ற இச்செய்தி சிறிது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ‘தமிழகத்தில் இதுவரை அதிகபட்சமாக செங்கல்பட்டில் 18 செமீ மழை பதிவாகியுள்ளது’ என்று தெரிவித்தார் மற்றும் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் 13 சதவீதமும், புதுச்சேரியில் 1சதவீதமும் மற்றும் சென்னையில் 44 சதவீதமும் குறைவாக பெய்துள்ளதாக தெரிவித்தார்.