Chennai Polling Results 2021

சென்னையில் 9 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 6 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்றும் சர்வேக்கள் தெரிவிக்கின்றன.

Chennai Polling Results 2021 : சென்னை மாவட்டத்தில் மொத்தம் 16 தொகுதிகள் உள்ளன. இதில் திமுக, அதிமுக கட்சிகள் தொடர்ந்து வெற்றி பெறும் வரும் தொகுதிகளும் உள்ளது. ராயபுரம், ஆ.கே.நகர் போன்ற தொகுதிகள் பாரம்பரியமாக அதிமுக வெற்றி பெறும் தொகுதிகள். அதே போல் திமுக வெற்றி பெறும் தொகுதிகள் என கொளத்தூர், எழும்பூர், துறைமுகம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட தொகுதிகள் உள்ளது. சென்னையில் திமுக வெற்றி பெறும் தொகுதிகள் அதிகம் என்பதால் சென்னை எங்கள் கோட்டை என்று திமுகவினர் தெரிவித்து வந்தனர். இந்த கூற்றை தவிடு பொடியாக்கும் வகையில் இம்முறை அதிமுக சென்னையில் 9 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. ராயபுரம், ஆர்.கே நகர், அண்ணாநகர், வில்லிவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, டி. நகர், மைலாப்பூர் மற்றும் வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராயபுரம் தொகுதியின் வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார் தொகுதி மக்களுக்கு நன்கு அறிந்தவராகவும், அமைச்சராகவும் தொடர்ந்து இருக்கிறார். இது அவர் வெற்றி பெறுவதற்கு சாதகமாக அமைந்துள்ளது. ஆர்.கே. நகர் தொகுதி ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி, அதிமுக வாக்காளர்கள் அதிகம் உள்ளதால் இந்த தொகுதியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்ணாநகரை பொறுத்த வரை கோகுல இந்திரா ஏற்கனவே இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெ.சி.டி பிரபாகர் தொகுதிக்கு நன்றாக அறிமுகமான நபர். விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளர் ரவி தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். தொகுதிக்கு செய்துள்ள திட்டங்களின் அடிப்படையில் ரவி வெற்றி பெறுவார் என்று தெரிகிறது. சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் சைதை துரைசாமி தொகுதி மக்களுக்கு அறிமுகமானவர் என்பதோடு கட்சியை தாண்டி சமூக பணிகளை மேற்கொண்டு வருவதால் மக்கள் ஆதரவு அவருக்கு சாதகமாக இருப்பதாக தெரிகிறது. டி.நகர் தொகுதியின் வேட்பாளர் சத்தியநாரயணா தற்போதைய சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார், அவர் செய்த பணிகளின் அடிப்படையில் வாக்குகளை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மைலாப்பூர் தொகுதி வேட்பாளர் ஆர். நட்ராஜ் சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார், நேர்மையானவர் என்பதால் மக்களின் செல்வாக்கு அவருக்கு சாதகமாக உள்ளது. வேளச்சேரி தொகுதி வேட்பாளர் அசோக் ஏற்கனவே போட்டியிட்டு சட்ட மன்ற உறுப்பினராக இருந்துள்ளார், அவரும் தொகுதி மக்கள் அனைவருக்கும் அறிந்த ஒருவாராக இருப்பது சாதகமாக அமைந்துள்ளது.

ஆயிரம் விளக்கு தொகுதியில் இழுபறி நிலை நீடிப்பதாகவும், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க நகர், எழும்பூர், துறைமுகம், மற்றும் திருவல்லிக்கேணி தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்றும் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 9 தொகுதிகளில் வெற்றி பெறுவதன் மூலம் அதிமுக தமிழகத்தின் தலைநகரான சென்னையை கைப்பற்றும் என்றும் தெரிகிறது.