Biometric Attendance for Teachers :
விழுப்புரம்: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு முறை வரும் ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்படுகிறது.
மேலும் மாதத்தில் 3 நாள் தாமதமாக வந்தால் ஆப்சென்ட் போடப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதற்கு சமூக, பொருளாதார சூழ்நிலை, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு முழுமையாக இல்லாமை போன்றவை காரணங்களாக அமைகின்றன.
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், பொதுவாக ஆசிரியர்கள் பள்ளி துவக்க நேரத்தில் வந்து பள்ளி நேரம் முடியும் வரை பணியாற்றினாலே ஓரளவிற்கு மாணவ, மாணவிகளை கண்காணித்து 100 சதவீத தேர்ச்சிக்கு வழிவகுக்க முடியும் கூறுகின்றனர்.
மேலும் அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் காலதாமதமாக வந்து, வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டுச் செல்வது, சைடு பிசினஸ் போன்றவற்றில் சிலர் ஈடுபடுவது என பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.
இடைநிலை ஆசிரியர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்: வைகோ அறிக்கை!
இந்நிலையில், இதற்கு முதற்கட்டமாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை கண்காணிக்க பயோ மெட்ரிக் முறையை வரும் கல்வியாண்டில் அமல்படுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் ஜூன் மாதம் முதல் இம்முறை அமல்படுத்தப்படுகிறது.
இதை முன்னிட்டு பயோ மெட்ரிக் இயந்திரத்தை கையாளும் முறை, அதில் வருகையை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 2 பயோ மெட்ரிக் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களின் நேரம் முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்தே கண்காணிக்கப்படும்.
எனவே தினசரி காலை 10 மணிக்கு எந்தெந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் தாமதமாக வந்துள்ளனர் மற்றும் வராதவர்கள் முறைப்படி விடுமுறை அனுமதி பெற்றுள்ளார்களா, போன்ற விவரங்கள் கண்காணிக்கப்படும்.
மேலும் மாதத்தில் 3 நாட்களுக்கு மேல் தாமதமாக வந்தால் ஆப்சென்ட் போடப்படும் என விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தெரிவித்துள்ளார்.