Bigil 2

விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்திற்கு போதிய கூட்டம் இல்லாததால் காட்சி ரத்து செய்யப்பட்டது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த 25ம் தேதி வெளியான திரைப்படம் பிகில். இப்படம் ரூ.200 கோடி வசூல் செய்துவிட்டதாக கூறப்பட்டது. அதே நேரம் இப்படம் விஜய் ரசிகர்களை கவர்ந்ததே தவிர பொதுவான ரசிகர்களுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது. எனவே, நாட்கள் செல்ல செல்ல இப்படத்திற்கு தியேட்டர்களில் போதிய கூட்டம் இல்லை எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில், பிகில் திரைப்படம் வெளியாகி ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், சென்னையில் உள்ள தேவி பாரடைஸில் பிகில் திரையிடப்பட்டது. ஆனால், இன்று மதிய காட்சிக்கு அந்த தியேட்டரில் போதுமான கூட்டம் இல்லை. ஆன்லைனில் கூட குறைந்த அளவு எண்ணிக்கையில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. எனவே, அந்த திரையரங்கில் அக்காட்சி ரத்து செய்யப்பட்டது.

இது தொடர்பாக விளக்கம் அளித்த தியேட்டர் நிர்வாகம், தேவி சினிமாவில் உள்ள 4 திரையில் மொத்தம் 2 திரையில் பிகில் படம் திரையிடப்பட்டிருந்தது. இதில், 2 திரையிலும் போதுமான கூட்டம் இல்லை. எனவே, படம் பார்க்க வந்தவர்களை ஒரே திரையரங்கில் அமர வைத்தோம் என கூறியுள்ளனர்.