தன் படங்கள் அனைத்தும் காப்பி என புகார் எழுந்து வருகிற நிலையில் இதுபற்றி இயக்குனர் அட்லீ விளக்கம் அளித்துள்ளார்.
ராஜாராணி திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் அட்லீ. ஆனால், அப்படமே ‘மௌனராகத்தை’ சுட்டு எடுக்கப்பட்டது என பலரும் கூறினர். அதேபோல், அவரின் தெறி படம் ‘சத்ரியன்’ படத்தின் உல்டா என்றும், மெர்சல் திரைப்படம் ‘மூன்று முகத்தின்’ காப்பி எனவும் கூறப்பட்டது. தற்போது விஜய் நடிப்பில் அவர் இயக்கியுள்ள பிகில் திரைப்படம் ஷாருக்கான் நடித்த ‘சக்தே இந்தியா’ வின் காப்பி என சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர். அட்லீ என்றாலே காப்பி என்கிற இமேஜ் அவர் மீது படிந்துள்ளது.
இன்னும் சொல்லபோனால் பிகில் திரைப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் பீலே படத்தில் இருந்த காட்சிகளோடு அப்படியே ஒத்துப் போனது. அந்த வீடியோக்களை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தனர்.
இந்நிலையில், இதுபற்றி விளக்கம் அளித்துள்ள அட்லீ ‘ நான் பார்க்கும் திரைப்படங்கள் எனக்குள் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. நான் ஒரு படம் எடுக்க வேண்டுமென்றால் 2 ஆயிரம் படங்களை நான் ஒப்பிட வேண்டும்.
ஒரு படத்தின் கதையை நீங்கள் உண்மையாக எழுதியிருந்தால் அதை உங்கள் படம் என்று கருதுவேன். மக்கள் ஏதாவது சொல்வார்களே என நினைத்து அதே வகையைச் சேர்ந்த வேறு படங்களுடன் ஒப்பிடுவது பாதுகாப்பற்றத்தன்மை. எனக்கு அந்த பாதுகாப்பற்ற தன்மை இல்லை. இந்த படத்தின் உள்ளடக்கம் என்னுடையது என நினைக்கிறேன்.
ஆம், அந்த படங்களை நான் பார்த்திருக்கிறேன், எனக்கு அவை பிடித்தும் இருக்கிறது. ஆனால் என்னுடைய படத்தின் உள்ளடக்கம் அவற்றின் பாதிப்பில் உருவானதல்ல” என அட்லீ கூறியுள்ளார்.