Asian Cup football match – சென்னை மற்றும் கொழும்பு அணிகள் மோதிய கிளப் அணிகளுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் ‘பிளே- ஆப்’ முதல் சுற்றுப்போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது.
ஆசிய கிளப் கால்பந்து அணிகளுக்கு இடையே ஆசிய கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. கடந்த ஐ.எஸ்.எல்., ‘சீசனில்’ கோப்பை வென்ற சென்னை அணி ‘பிளே ஆப்’ தகுதிச்சுற்றில் பங்கேற்கிறது.
இதில் இலங்கையை சேர்ந்த கொழும்பு அணியுடன் மோதுகிறது. முதல் சுற்று கொழும்பு நகரில் நடந்தது.
துவக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க போராடின. போட்டியின் 21வது நிமிடத்தில் சென்னையின் ஜீஜே தந்த பந்தை சக வீரர் பிரான்சிஸ் உதைத்தார்.
ஆனால், பந்து கோல்போஸ்ட் வெளியே சென்றது. சொந்த மண்ணில் சளைக்காமல் கொழும்பு வீரர்கள் நெருக்கடி தந்தனர். அடிக்கடி சென்னையின் தற்காப்பு பகுதியை தகர்க்க முயற்சி செய்தனர்.
கொழும்பு நகரின் வெப்பநிலை இரு அணி வீரர்களுக்கும் மிகப்பெரும் சவாலாக இருந்தது. இதனால், முதல் 30 நிமிட முடிவில், தண்ணீர் அருந்த இடைவேளை தரப்பட்டது.
இரண்டாவது பாதியில் அனிருத் தபா, ரபெல் உள்ளிட்டோர் பந்தை கடத்தி வந்தனர். இருப்பினும், கச்சிதமாக ‘பாஸ்’ செய்வதில் கோட்டைவிட்டனர்.
கடைசி கட்டத்தில் சென்னையின் கோல் வாய்ப்பையும் எதிரணியினர் முறியடித்தனர். முடிவில், போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது.
இரண்டாவது சுற்றுப்போட்டி வரும் 13ல் குஜராத்தின் ஆமதாபாத்தில் நடக்கவுள்ளது.