Android Kunjappan Remake Pooja

பூஜையுடன் இன்று தொடங்கியது கேஎஸ் ரவிக்குமாரின் திரைப்படம் இணையத்தில் வெளியாகும் புகைப்படங்கள்.

Android Kunjappan Remake Pooja : சில திரைப்படங்களைக் காணும் போது, இப்படியொரு கதையை எப்படி யோசித்தார்கள் என்று சிந்திக்க வைக்கும். அப்படி பலராலும் பேசப்பட்டு, கொண்டாடப்பட்ட மலையாள படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’.

ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சுராஜ், செளபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குச் சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகளை வென்றது.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றினார் முன்னணி இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். பலரும் அவர் இயக்குவதற்காகக் கைப்பற்றியுள்ளார் என எண்ணினார்கள். ஆனால் கமல் நடித்த ‘தெனாலி’ படத்தைத் தொடர்ந்து கே.எஸ்.ரவிகுமார், ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ தமிழ் ரீமேக்கை தயாரித்து நடிக்கிறார்.

‘கூகுள் குட்டப்பன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படக்குழுவினர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, இயக்குநர் விக்ரமன், பார்த்திபன் உள்ளிட்ட பலர் படப்பூஜையில் கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ கதையைத் தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி சுவராசியமாகத் திரைக்கதை அமைத்துள்ளனர். இந்தப் படத்தை சுமார் 10 ஆண்டுகளாக கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்து வரும் சபரி மற்றும் சரவணன் இருவரும் இணைந்து இயக்குகிறார்கள்.

இதன் படப்பிடிப்பு பிப்ரவரி 15-ம் தேதி முதல் தென்காசியில் தொடங்குகிறது. ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான சுராஜ் கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், செளபின் கதாபாத்திரத்தில் தர்ஷன் நடிக்கவுள்ளார்கள். ஆர்.கே செல்லுலாய்ட்ஸ் சார்பாக கே.எஸ்.ரவிகுமார் தயாரிக்கிறார்.

இதில் நாயகியாக லாஸ்லியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், யோகி பாபு, மனோபாலா, மாரியப்பன், ப்ராங்ஸ்டார் ராகுல் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். ‘பண்டிகை’, ‘ரங்கா’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள ஆர்வி ஒளிப்பதிவாளராகவும், இசையமைப்பாளராக ஜிப்ரானும், பாடலாசிரியராக மதன் கார்க்கியும் பணிபுரியவுள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி, தென்காசி, சென்னை மற்றும் சில காட்சிகளை வெளிநாட்டிலும் படமாக்கவுள்ளனர். தற்போது படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாகக் களமிறங்கியுள்ளது படக்குழு.

தமிழக மக்களுக்கு ஒரு வித்தியாசமான காமெடி கலந்த எமோஷனல் கதை ஒன்று தயாராகி வருகிறது. கண்டிப்பாகத் திரையரங்குகளில் சிரிப்பலைக்கு கியாரண்டி தான்!