Anbumani Ramadoss – சேலம்: அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது தமிழகம் முழுவதும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில்,
வருகிற திங்கள் கிழமை அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என சபதம் எடுத்த பாமக, தற்போது அந்த முடிவை மாற்றிக் கொண்டு அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தது.
மேலும், நாடாளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகளை தவிர ஒரு ராஜ்ய சபா சீட்டும் பாமகவுக்கு ஒதுக்கி தரப்பட்டுள்ளது.
இதற்கிடையில், திமுக கூட்டணியில் பாமகவை சேர்க்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டதாக பல்வேறு வகையான தகவல்கள் கூறப்படுகிறது. ஆனால், பாமக அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தது.
இதனால், ஆவேசமடைந்த ஸ்டாலின் கடும் வார்த்தைகளால் பாமகவை விமர்சித்ததாக அரசியல் விமர்சகர்கள் ஒருபுறம் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் மத்தியில் ஆளும் பாஜகவை விமர்சித்த அன்புமணி ராமதாஸின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வைத்து தற்போது சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள், வீடியோக்கள் மற்றும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால், அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் இதுகுறித்து இதுவரை வாய் திறக்கவில்லை.
இந்தநிலையில், சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், கூட்டணி விமர்சனம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘கூட்டணி குறித்த அத்தனை கேள்விகளுக்கும் வருகின்ற திங்கள்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பில் பதில் அளிப்பேன் ‘ என்று கூறினார்.
மேலும், கூட்டணி என்றால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும் என்றும் கூறினார்.