Anbumani Ramadoss
Anbumani Ramadoss

Anbumani Ramadoss – சென்னை: பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பொள்ளாச்சியில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்களை கொண்ட குழு கடந்த 7 வருடமாக பெண்களை ஏமாற்றி வந்தது தற்போது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் கூறியிருப்பதாவது, பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவன் தலைமையிலான கும்பல், கற்பனையில் கூட சிந்தித்துப் பார்க்க முடியாத அளவுக்கு பாலியல் வக்கிரங்களையும், கொடூரங்களையும் செய்துள்ளது.

முகநூல்(Facebook) மூலம் அறியப்பட்ட தோழிகள், நண்பர்களின் உறவினர்கள், வலிமையான பின்னணி இல்லாத எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களிடம் பழகி, காதல் ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாகவும், அதை படம் பிடித்து அவர்களிடம் காட்டி பணம் பறித்தல், பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்குதல் உள்ளிட்ட குற்றங்களை இந்த கும்பல் செய்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை அறிந்து வருந்துவதாக தெரிவித்த ராமதாஸ், சகோதரிகளாக பார்க்க வேண்டிய பெண்களை, சிதைத்த இந்த மிருகங்களுக்கு கருணை காட்டக்கூடாது. இதற்குக் காரணமான நால்வரை காவல்துறை கைது செய்திருக்கின்றனர்.

இதயத்தை பதைபதைக்கச் செய்யும் இந்த பாலியல் குற்றங்களின் பின்னணியில் உள்ளவர்களை விரைவில் அடையாளம் கண்டு அவர்களுக்கு கடுமையான தண்டனையையும் பெற்றுத் தர வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த வக்கிர கும்பலால் இதுவரை 250க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கும், மிரட்டல்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் தன்னை பெரும் அதிர்ச்சி மற்றும் கோபம் அடைய வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது இரக்கம் காட்டாமல், அவர்களை தண்டிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.