AIADMK win ops
AIADMK win ops

மதுரை: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகித்து வரும் இவ்வேளையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உறுதியாக கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடந்துமுடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் நா.புகழேந்தி, அதிமுக சார்பில் முத்தமிழ்செல்வன், நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி உள்ளிட்ட 12 பேர், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், அதிமுக சார்பில் நாராயணன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜநாராயணன் உள்ளிட்ட 23 பேர் போட்டியிட்டனர்.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில், ஆரம்பம் முதலே அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் மருது சகோதரர்களின் 218ஆவது குருபூஜை இன்று நடைபெறுகிறது. இதையொட்டி மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர், “நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என தெரிவித்துள்ளார். அதிமுக தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் கட்சி தொண்டர்கள் அனைவரும் உற்சாகத்தில் ஈடுபட்டுள்ளனர்.