AIADMK Memebers Praises Tamil Nadu CM Edappadi Pazhanisamy

YouTube video

அதிமுகவின் செயற்குழுக்கூட்டம் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நடந்து முடிந்து எதிர்க்கட்சிகளுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

குளம், குட்டைகளை ஒப்பிடும் போது கடலில் அலையின் வேகம் அதிகமாகவே இருக்கும். அது போலத்தான் கடலுக்கு ஈடான மாபெரும் மக்கள் இயக்கமான அதிமுகவிலும் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படவே செய்யும். இந்த சின்ன
விஷயத்தை உலக செய்தியாக ஊதிப் பெரிதாக்க சில கட்சிகளைச் சார்ந்த ஊடகங்கள் முயற்சிப்பது வேடிக்கையான ஒன்று.

அதிமுகவின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் சென்னையிலுள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஒ.பன்னீர் செல்வம் வந்த போது அவரது ஆதரவாளர்கள் ஒருசிலர் வாழ்த்துக் கோஷங்களை எழுப்பினர். இதேபோல இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி வந்தபோதும் அவரது ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர்.

யாருடைய தூண்டுதலுமின்றி தன்னெழுச்சியாக நடைபெற்ற இந்த சாதாரண விஷயத்தை ஏதோ அதிமுகவிற்குள் கலகம், கலவரம் நிகழ்ந்ததைப் போல செய்தி சேனல்கள் சித்தரித்தன. ஆரம்பமே இப்படியென்றால் கூட்டத்தில்
நிச்சயம் அடிதடி தான் என எண்ணுமளவிற்கு ஊடகங்களின் இந்த சித்தரிப்பு இருந்தது.

ஆனால் சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த அந்தக் கூட்டம் அதிமுகவிற்கே உரிய ராணுவக் கட்டுப்பாட்டுடன் மிக அமைதியாகவே நடைபெற்று முடிந்திருக்கிறது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் செயல்திட்டங்கள் பற்றியும், கூட்டணி குறித்தும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன, அத்துடன் வரும் 28ஆம் தேதி கட்சியின் செயற்குழுவைக் கூட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என்கிற கேள்வியை அக்கட்சியினர் யாரும் எழுப்பியதாகத் தெரியவில்லை. கட்சிக்கு சம்மந்தமில்லாத சிலர் தான் இந்த வெற்றுக் கேள்வியை வீர வேசத்துடன் எழுப்புகின்றனர்.

இந்தக் கேள்வியை எழுப்புவதன் மூலம் அதிமுகவில் பிளவை ஏற்படுத்தி, அதன் மூலம் திமுகவுக்கு ஆதாயம் தேட வேண்டும் என்பது தான் இவர்களின் உண்மையான நோக்கம்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலம் அடையாளம் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். அப்போது அதிமுகவில் அரங்கேறிய உட்கட்சி பூசல்களால், இந்த ஆட்சியின் ஆயுள், நாள் கணக்கிலேயே நிர்ணயிக்கப்பட்டது.

அதிமுகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி விட்டதாகவே திமுக கொக்கரித்தது. பொய் பிரச்சாரம், அவதூறுகள், வழக்குகள் என அதிமுக அரசுக்கு அந்தக் கட்சி தொடர்ச்சியாக இடையூறுகளை ஏற்படுத்தியது.

இத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து ஆட்சியை நான்காவது ஆண்டாக நீடிக்கச் செய்திருப்பதில் எல்லோருக்கும் பங்கு உண்டு என்ற போதிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இதில் முக்கிய பொறுப்பு இருப்பதை
அனைவரும் ஒத்துக் கொள்வார்கள்.

அதுமட்டுமா! செய்வதறியாது திணறிக் கொண்டிருந்த லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்டி, எம்.எல்.ஏக்களை, நிர்வாகிகளை ஒருங்கிணைத்து இரட்டை இலை சின்னத்தை மீட்டதிலும் அவரது பங்களிப்பு அபரிதமானது.

18 தொகுதி இடைத் தேர்தல், நான்குனேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று அதிமுக அரசின் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டியதிலும் எடப்பாடிக்கு முக்கிய பங்கு உண்டு.

இவை அனைத்திற்கும் மேலாக தனது எளிமையான அணுகுமுறைகளால், சாதுர்யமான ஆட்சித் திறனால் இன்றைக்கு இனம், மதம், வர்க்க பேதங்களைக் கடந்து எல்லோராலும் விரும்பப்படும் தலைவராக
உருவெடுத்திருக்கிறார் எடப்பாடி.

காலம் கைகாட்டுகின்ற தலைவர் வழி நடப்பது, ஒரு இயக்கத்தின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்தும் என்கிற வரலாற்று உண்மையை கடைக்கோடி அதிமுக தொண்டர்கள் மிகத் தெளிவாக அறிந்து வைத்துள்ளனர்.

எனவே குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என காத்திருக்கும் அறிவிலிகள் ஏமாறப்போவது நிச்சயத்திலும் நிச்சயம் எனவும் செயற்குழுக் கூட்டத்தில் பிரச்சினை வரும் அதை ஊதி பெரிதாக்கி ஆதாயம் தேடலாம் என எதிர்பார்த்த எதிர்க்கட்சிகள் ஏமாற்றத்தையே சந்தித்துள்ளன என அரசியல் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.