நடிகை சுஹாசினி மணிரத்னம் நயன்தாராவின் படமான ‘புல்லட்’ திரைப்படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அவரை “பொன்னியின் செல்வன்” படத்தை பற்றி கேள்வி எழுப்பி நச்சரித்து உள்ளனர்.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெருமையைக் கொண்டவர் நயன்தாரா. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான “ஆறடுகல புல்லட்” என்னும்  திரைப்படத்தை தமிழில் “புல்லட்” என்று டப் செய்துள்ளனர். இந்த படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் டோலிவுட் நடிகர் கோபி சந்துக்கு ஜோடியாக  நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இதில் பிரகாஷ் ராஜ், கொரட்டலா சீனிவாஸ், பிரம்மானந்தம், சுரேகா வாணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் போஸ்டரை நடிகையும் இயக்குனர் மணிரத்னமின் மனைவியுமான சுஹாசினி மணிரத்னம் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார்.  அதாவது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 7த் சேனல் நாராயணனின் புல்லட் படத்தின் “செகண்ட் லுக் போஸ்டர்” இது. இதில், நயன்தாரா நடித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை சிறிதும் கண்டுகொள்ளாத  ரசிகர்கள் சுஹாசினி மணிரத்தினமிடம் “பொன்னியின் செல்வன்” படம் என்னாச்சு? எந்தவொரு அப்டேட்டும் ஏன் இன்னும் வெளியிடவில்லை. படம் திட்டமிட்டபடி செப்டம்பர் 30- ஆம் தேதியில் வெளியாகுமா? இல்லையா? எதையாவது சொல்லுங்க என ரசிகர்கள் கேள்விகளைக் கேட்டு நச்சரித்து வருகின்றனர்.