75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விழாவில் கலந்து கொண்ட சூரியின் பேட்டி வைரலாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபலம் முன்னணி காமெடி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சூரி. இவர் 75 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு , தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நேற்று நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டார். அப்பொழுது அவர் சில விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.

அதாவது நான் கார்த்தியுடன் நடித்துள்ள ‘விருமன்’ படத்துக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போது, வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தில் நடித்து வருகிறேன். இதில் கதையின் நாயகனாக நடிக்கிறேன். இதன் கதையை இயக்குநர் வெற்றிமாறன் சொல்லும்போது, ‘இந்த கேரக்டர் நமக்கு இருக்குமோ, அந்த கேரக்டரில் நடிக்க வேண்டியிருக்குமோ?’ என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் ‘நீங்கள்தான் கதையின் நாயகன்’ என்று அவர் சொன்னதும் என்னால் மகிழ்ச்சியை உடனடியாக வெளிப்படுத்த முடியவில்லை.

அவர் படத்தில், சின்ன வேடத்தில் நடித்தால்கூட போதும் என நினைத்திருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு வாய்ப்பை நான் எதிர்பார்க்கவில்லை. படப்பிடிப்பில் அவர் இயக்கத்தைப் பார்த்து வியக்கிறேன். அவர் சிறந்த இயக்குநர் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் படத்தில் நானே எனக்கு வேறொருவனாகத் தெரிகிறேன். இதில், “கதையின் நாயகனாக நடித்திருந்தாலும் காமெடியன் சூரி என்பதே என் அடையாளம்… அதை விடமாட்டேன்”. என்று மனம் திறந்து அப்பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.